உங்கள் வீட்டில் சிக்கன் ரெசிபி செய்ய போகிறீர்களா? அப்படியெனில், ஆந்திரா ஸ்டைலில் ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் முருங்கைக்காய் போட்டு சிக்கன் கிரேவி செய்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி. இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை ஒரு முறை செய்து கொடுங்கள், அடிக்கடி செய்து தர சொல்லி அனைவரும் கேட்பார்கள். சரி வாருங்கள் இப்போது ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1 கிலோ
- முருங்கைக்காய் - 2
- தக்காளி - 2 (நறுக்கியது)
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 6
- கிராம்பு - 5
- மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 4 பல் (பேஸ்ட் செய்து கொள்ளவும்)
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு…
- பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
- இஞ்சி - 1 எலுமிச்சை அளவு
- பூண்டு - 12 பல்
- பட்டை - 1 துண்டு
- கொத்தமல்லி - 1/4 கப்
- புதினா - 1/4 கப்
செய்முறை
- முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- அதன் பின் அரைப்பதற்காக கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனுடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி வைத்திடவும்.
- அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், கிராம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- இப்போது அதனுடன் துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது, அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, சிறிது உப்பை போட்டு நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
- பின்னர், கடாயை மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு சிக்கன் நீர் விட்டு வரும் வரை வேக விடவும்.
- அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வேக விடவும்.
- பிறகு அதில் ஒரு கப் சுடுநீரை ஊற்றி, 10-15 நிமிடங்கள் சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
- சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் விழுது, மல்லி தூள், அரைத்த பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி ரெடி.
Image Courtesy: gethascooking